Tuesday, December 3, 2013

ஆச்சார்யாள் - அண்டம் அளந்த வாமநனோ !!!

ஆச்சார்யாள் - அண்டம் அளந்த வாமநனோ !!!



Sage of Kanchi ( My - Source)
by Mannargudi Seetharaman Sreenivasan Anna

அன்று காலையில்தான் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில் பரமாசார்யாளைத் தரிசித்து விட்டு ஆசி பெற்றுச் சென்றிருந்தார்கள் . ஆசார்யாள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். மாலை சுமார் நான்கு மணியிருக்கும். “பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப் போகிறார்கள். நீங்களும் இருந்து விட்டுப் போங்களேன்” என்றார் ஸ்ரீ மடத்தில் இருந்த ஒருவர். “சரி” என்று தயங்கினேன்.

சில நிமிடங்களுக்குள்ளாக எதிர்பார்த்த பேராசிரியர்கள் வந்தனர். “பெரியவாளைப் பார்க்க அவர்கள் வரலாம். உங்களையும் பெரியவாள் கூட வரச் சொன்னார்” என்றார் மடத்தைச் சேர்ந்தவர். மகிழ்ச்சியுடன் உடன் சென்றேன். பெரியவாள் எளிமையே உருவமாகத் தரையில் அமர்ந்திருந்தார்கள். தரிசிக்க வந்த ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அமரும்படி கூறினார். என்னை தமக்கு அருகில் வந்து அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லுமாறு பணித்தார்.

வந்தவர்களில் மூவர் பெண்கள்; இருவர் ஆண்கள். அவர்களின் தலைவராக இருப்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருப்பதாகவும், மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினார். பெரியவாள் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருடைய பெயரையும், அவர்கள் எந்தத் துறையில் பேராசிரியர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.

அவர்கள் தங்கள் தங்கள் துறைகளைக் கூறி வரும்போது, பெரியவாள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியைப் பார்த்து, “நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா?” என்று கேட்டார். அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர். அங்கு பேராசிரியர். அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன். அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது. “எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” என்றார். அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க் என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா? என்று கேட்டார். அந்த பெண்மணி ஆச்சரியத்தில் மூழ்கி தன்னுடன் வந்த ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே, “ஆமாம்” என்று கூறினார். இதற்கு முன் அப்பெண்மணி இந்தியா வந்ததேயில்லை. அப் பெண்மணியைப் பற்றி யாருக்குமே தெரியாது. அப்படியிருக்க, பெரியவாள் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும், இந்தப் பகுதி தான் என்று வரையறுத்துக் கூறும் பாங்கையும் கண்டு நாங்கள் வியப்பை அடக்க முடியாது வாய் புதைத்து நின்றோம்.

எங்கள் முக பாவங்களைப் பார்த்து பெரியவாளே அது எப்படி என்று விரித்து உரைத்தார்கள். “இத்தாலிய நாட்டினருக்கும், பாரிஸுக்கும் வடக்கே லுக்ஸ்ம்பர்கிற்குத் தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும். இத்தாலியர்களின் லத்தீன் மொழியின் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும்” என்றார்கள். அதைக் கேட்டு அந்த பெண்மணி, “ஆமாம்! ஆமாம்!” என்று வேகமாகத் தலையாட்டினார்.

காஞ்சிபுரத்தில் ஏதோ ஒரு பகுதியிலிருக்கும் பெரியவாள், உலகில் எங்கிருந்து யார் வந்தாலும், எம்மொழி பேசினாலும், இந்த பகுதியிலிருந்து வந்தவர், இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்த்த போது, வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து இன்று பெரியவாள் உருவில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாகத் திகழ்வதை உணர்ந்தேன்.

– டாக்டர், இரா. நாகசாமி (முன்னாள் தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர்)

No comments:

Post a Comment