Friday, November 22, 2013

மகா கால பைரவாஷ்டமி - அஷ்ட பைரவர் வேள்வி விழா

மகா கால பைரவாஷ்டமி - அஷ்ட பைரவர் வேள்வி விழா



பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், வான் மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் காலச் சக்கரத்தின் ஆட்சிக்கு உட்பட்டவை. இந்தக் காலச் சக்கரத்தை இயக்குபவர் கால பைரவர்.

பிரம்மதேவனின் அகந்தையை அடக்க, சிவபெருமான் ஆணைப்படி ருத்திரர், கால பைரவர் உருக்கொண்டு, பிரம்மனின் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். நவகிரகங்கள் அனைத்தும் கால பைரவருக்குள் அடக்கம். நவகிரகங்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் முதலானவை நீங்க கால பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பு. பொதுவாக மக்களால் ஒதுக்கப்படும் அஷ்டமி திதியில் அஷ்ட லட்சுமிகளும், கால பைரவரால் வழிபடப்படுவதால், அஷ்டலட்சுமியின் அருளும் பெற, அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபடுவது மேலும் சிறப்பு.

இப்படிப் பல்வேறு சிறப்பு களைப் பெற்ற மகாகால பைரவருக்கு செம்பாக்கம் என வழங்கும் வட திருவானைக்கா அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு அருகில் தனிக்கோயிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருப்போரூர் செங்கல்பட்டு வழித்தடத்தில் திருப்போரூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் இராஜராஜ சோழன் காலத்தில் அமைக்கப்பட்டதாக, பெருந்தண்டலம் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

கார்த்திகை மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு பெற்றது. எனவே 4வது ஆண்டாக செம்பாக்கம் அருள்மிகு மகா கால பைரவருக்கு 23.11.2013 முதல் 25.11.2013 வரை தினமும் அஷ்ட பைரவர் வேள்வி, யாகம், சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற உள்ளன.

இப்பெருவிழாவில் கலந்துகொண்டு சிவன் அம்சமான மகா கால பைரவரை வழிபட்டு, பிறகு அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரப் பெருமானையும் வழிபட்டால் கால சர்ப்பதோஷம், நவகிரக தோஷம் நீங்கி அஷ்டலட்சுமி கடாட்சமும் பெறலாம்.

No comments:

Post a Comment