Friday, December 21, 2012

திருப்பாவை பாடல் 7 - திருவெம்பாவை பாடல் 7

திருப்பாவை பாடல் 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.



பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன்
என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும்
குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும்
ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை
மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள்
மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும்,
அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள
அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து
ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை?
எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச்
செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள்
நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது
உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன?
பிரகாசமான முகத்தைக் கொண்டவளே!
உன் வீட்டுக்கதவைத் திற.


விளக்கம்: பெருமாளுக்கு பல திருநாமங்கள்
உண்டு. இதில் கேசவா என்ற திருநாமத்தை
ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு
கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு
தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. கேசவன்
என்ற சொல்லுக்கே தடைகளை நீக்குபவன் என்று
தான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக்
கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான
ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள
மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில்
கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.




திருவெம்பாவை பாடல் 7
அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.



பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது
சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ?
தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும்,
மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய
திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை
அணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்பாயே!
அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய
சிவனே போற்றி என சொல்லும்போது,
தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி
உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன்
எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம்
போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.
இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு
காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம்
இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ
நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும்
எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன
ஒரு பரிசாகக் கருதுகிறாயா?

விளக்கம்: அதிகாலை வேளையில் தூங்கவே கூடாது.
நம் பணிகள் காலை நாலரைக்கெல்லாம் துவங்கி விட
வேண்டும். மார்கழியில் பனியடிக்கிறதே என்றெல்லாம்
காரணம் சொல்லக்கூடாது. எல்லா தட்பவெப்பங்களுக்கும்
தகுந்தாற் போல், நம் உடலைப் பண்படுத்திக் கொள்ள
வேண்டும். காலை தூக்கத்தில் இருந்து விடுபடுவர்கள்
வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. சூரியனைப் பார்க்காத
ஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்

1 comment:

  1. அருமை! அருமை!! உங்கள் படைப்பு தமிழுக்குப் பெருமை!!!

    ReplyDelete