Thursday, December 20, 2012

திருப்பாவை பாடல் 6 - திருவெம்பாவை பாடல் 6


திருப்பாவை பாடல் 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு!
பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய
ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை
வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில்
வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில்
விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக்
கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது
போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர
வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக்
குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும்,
முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா
உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து
இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.


விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி
வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன்
கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.
அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து
விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில்
அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல்
அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு
மோட்சமளித்தான் எம்பெருமான்.
கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ.,
தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப்
பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்


திருவெம்பாவை பாடல் 6


மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்



பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ
எங்களிடம், உங்களை நானே வந்து அதிகாலையில்
எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை
எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே?
மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று
கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும்
விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும்,
பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை
உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த
எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய்.
அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது
உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து
நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில்
நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

விளக்கம்: இறைவனை தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும்
வணங்க வேண்டும் என்பதை பாடல் அடிகள் உணர்த்துகின்றன.
மேலும், வார்த்தைகளை விட செயலே உயர்ந்ததாக இருக்க
வேண்டும் என்பதையும் இப்பாடல் சொல்கிறது. ஒன்றைச்
சொல்லிவிட்டால், அதைச் செய்தே தீர வேண்டும்,
இல்லாவிட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகி தலைகுனிய
நேரிடும் என்பதும் இப்பாடல் உணர்த்தும் தத்துவம்.

No comments:

Post a Comment