Saturday, December 29, 2012

திருப்பாவை பாடல் 15 - திருவெம்பாவை பாடல் 15

திருப்பாவை பாடல் 15


எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்!
போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.


பொருள்: ஏலே என் தோழியே! இளமைக் கிளியே!
நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம்
காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும்
உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே
தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த
தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்!
இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.உடனே தோழிகள்,
உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது.
இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம்
கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது
அவள், சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே
பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான்
ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்,
என்கிறாள்.அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து
வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும்.
அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு
இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள்.
அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள்.
என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே!
எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள்
அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை
எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம்
என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை
வேட்டையாடும் திறம் கொண்டவனுமான
மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே
வருவாய், என்கிறார்கள்.

விளக்கம்: ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல்,
அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட
பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு
பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு
பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு
சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள்.
படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது.
இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம்
முடிந்து விடுகிறது.


திருவெம்பாவை பாடல் 15

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.




பொருள்: அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும்
அணிந்த பெண்களே! நம் தோழி எம்பெருமானே
என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள்.
அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம்
மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப்
பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக
பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால்
இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும்.
அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும்
வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது
தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள்.
அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக்
காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து
பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான
குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.

விளக்கம்: மாணிக்கவாசகர் சிவலோகத்துக்கே
சென்று விட்டதாகவும், தன்னை நந்தியாகப் பாவித்து,
அங்கேயே தங்கியிருந்ததாக கற்பனை செய்து
பாடியது இப்பாடல்.

No comments:

Post a Comment