Friday, December 28, 2012

திருப்பாவை பாடல் 14 - திருவெம்பாவை பாடல் 14

திருப்பாவை பாடல் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.



பொருள்: எங்களை முன்னதாகவே வந்து
எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே!
கொடுத்த வாக்கை மறந்ததற்காக
வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின்
பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில்
செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன.
ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி
உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள்
ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு
முழக்கம் செய்வதற்காக சென்று
கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும்
சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும்,
தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான
கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்: கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது.
வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற
முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு
கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம்
கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள்
வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே
பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது
இப்பாடல் உணர்த்தும் கருத்து.



திருவெம்பாவை பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.







பொருள்: ஆண்கள் அணிந்துள்ள காதணிகள்
தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள்
ஆட, பெண் களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில்
மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை
கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில்
ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்
பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ்
பாடுங்கள். வேதத்தின் பொருளையும், வேதத்தின்
பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும்
சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய்
திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த
சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம்
சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை
மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும்
முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப்
பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப்
பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய்
விளங் கும் அந்த சிவனின் பாதமலர்களைப்
பாடி நீராடுங்கள்.

விளக்கம்: குளிக்கும் போது உலகியல் சிந்தனைகளே
மனதில் இருக் கக்கூடாது. குறிப்பாக குளியலின்
போது இன்ப உணர்வுகளுக்கும், பிற கீழ்த் தரமான
எண்ணங்களுக்கும் இடம் தரவே கூடாது. இந்த
சமயத்தில் நமசிவாய, சிவாயநம என்ற நாமங்களே
நாவில் இருந்து வர வேண்டும். இந்த திருநாமங்களைச்
சொல்லிவிட்டு, அன்றையப் பணிகளை திட்டமிட்டு
செய்தால் நம்மை வெற்றி தேடி வரும் என்பது
இப்பாடலின் உட்கருத்து.

No comments:

Post a Comment