Wednesday, December 26, 2012

திருப்பாவை பாடல் 12 - திருவெம்பாவை பாடல் 12

திருப்பாவை பாடல் 12


கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.



பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை
எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும்
பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன.
அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை
சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால்
சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின்
தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ,
உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம்.
சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம்
கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த
கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப்
பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய்.
எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும்,
உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

விளக்கம்: எருமைகள் பால் சொரிந்து உறங்கும்
தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால்,
அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள்,
அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப்
பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம்
இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது.
மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில்
குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர
வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி,
மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி
இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள்.
எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல்
எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது
இப்பாடல் உணர்த்தும் கருத்து.


திருவெம்பாவை பாடல் 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்



பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள
பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல்
தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும்,
சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில்
அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும்,
பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும்,
படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான
தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான்.
அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள்
ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள்
பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில்
நீந்தி மகிழ்ந்து, சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி,
அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

விளக்கம்: இறைவனே ஆக்கவும், அழிக்கவும்,
காக்கவும் வல்லவன் என்பது அறிந்த விஷயம்.
இது நன்றாகத் தெரிந்தும் அவனைப் புரிந்து
கொள்ளாமல், தான் என்ற அகங்காரத்துடன்
திரிபவர்களே உலகில் அதிகம். உலகம் என்ற
நாடகத்தில் நமக்கு தரப்பட்டுள்ள பாத்திரத்திற்குரிய
இந்த நடிப்பை கைவிட்டு, அவனை அடைய வழி தேட
வேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.

No comments:

Post a Comment