Monday, December 24, 2012

திருப்பாவை பாடல் 10 - திருவெம்பாவை பாடல் 10



திருப்பாவை பாடல் 10



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.




பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை
எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம்
போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன்
இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை.
பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை
தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி
பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே
தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன்
என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள்.
உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து
விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே!
கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும்
இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

விளக்கம்: யாராவது நன்றாகத் தூங்கினால் சரியான
கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன
ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது.
நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும்.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள்.
ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம்
ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.



திருவெம்பாவை பாடல் 10




பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில்
உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே
சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான
பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின்
சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள்
ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது.
பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது
வானத்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப்
பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை
மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன்
ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும்,
விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து
துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது.
யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன்.
ஏராளமான பக்தர்களைப் பெற்றவன்.
அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார்
அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து
வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப்
பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

விளக்கம்: சிவனின் பெருமையை உயர்த்திச் சொல்லும்
பாடல் இது. போதார் புனை முடியும் என்ற வரிக்கு மலர்களை
அணிந்தவன் என்ற பொருள் வருகிறது. சிவனுக்கு கொன்றை,
ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை
அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது
மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா? உனக்கு மல்லிகையையும்,
ரோஜாவையும் வைத்துக் கொள். உனக்கு பயன்படாத ஒன்றை
எனக்கு அணிவி என்று தன் எளிமையை
வெளிப்படுத்துகிறான் இறைவன்.

No comments:

Post a Comment