Wednesday, January 1, 2014

தினம் ஒரு திருப்புகழ் - அகப்பொருள் வேண்ட


தினம் ஒரு திருப்புகழ் - அகப்பொருள் வேண்ட - நாள் - 45







ராகம் : ஆஹிரி தாளம்: கண்டசாபு


இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ

எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச

அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள்

அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே

ராகம்: பைரவி

நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே

நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா

பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா

பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே.


கருத்துரை திருமால் மருகா! பார்வதி பாலா! அவுணர் குலகாலா!
வள்ளி மணவாளா!  பழனிக் குமாரா! தேவர்களிடம் காதல் 
கொண்டமையால் சந்திரன் வெப்பத்தைக் கொடுக்கிறான். 
குயில், புல்லாங்குழல், முரசு, மணி முதலிய இசைகள் 
துன்புறுத்துகின்றன.   இவாறு இன்பவேட்கை கொண்ட 
இப்பெண் கொடியைத் தழுவி ஆட்கொள்ள மயில் மேல் 
வந்தருள்வீர்!


தொடரும் திருப்புகழ் ......................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment