Sunday, November 24, 2013

அற்புதம் நிறைந்த தெள்ளாறு

அற்புதம் நிறைந்த தெள்ளாறு






வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் நிறைந்த ஒரு தொன்மையான ஊர் தெள்ளாறு. மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட "நந்திக்கலம்பகம்' என்ற நூலின் மூலம் இவ்வூரின் பழைமையும் போர்ச்செய்திகளும் தெரிய வருகிறது. ஸ்ரீதிருநாவுக்கரசரும் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளும் இவ்வூரை வைப்புத் தலமாக வைத்துப் பாடியுள்ளதற்கான ஆதாரப் பாடல்களும் தேவாரத்தில் காணமுடிகிறது.

ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய அவிநாசி திருப்பதிகத்தின் ஒன்பதாம் பாடல்

"நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனே

வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்

புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை

உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே'' என்பது.

இத்திருப்பதிகம் அற்புதத் திருப்பதிகங்களுள் ஒன்று. அவினாசி என்னும் தலத்தினை கண் முதலையுண்டபாலனை சுந்தரர் அழைத்துத் தந்த அற்புதம் இங்கே நடந்தது. இப்பாடலில் "தெள்ளாறு' இடம்பெற்றமை கவனிக்கத்தக்கது.

நள்ளாறு-திருநள்ளாறு என்ற இடம் நளன் என்னும் மாமன்னனைப் பற்றியிருந்த சனி விலகிய இடம்.

அரத்துறை - திருஞான சம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை ஆகியவற்றை தந்த இடம். இதே வரிசையில் தெள்ளாறு வருவதால் இங்கும் ஏதோ அற்புதம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சான்றோர்கள் கருதுகின்றனர். இத்தலத்தின் பதிகம் கிடைக்காமையால் அந்த அற்புதம் நமக்குத் தெரியவில்லை.

இவ்வாலயத்தில் சனீஸ்வரனுக்கு தனிச் சந்நிதி உள்ளதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. இறைவனின் பெயர் திருமூலட்டான நாதர். அம்பிகையின் திருநாமம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி. இவ்வாலயத்தில் நவ: 28அன்று மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது.

No comments:

Post a Comment