Tuesday, November 19, 2013

தினமும் ஒரு திருப்புகழ் - அருள் பெற

தினமும் ஒரு திருப்புகழ்  - அருள் பெற  -  நாள் 9




ராகம் :- பேகட / ஸாரங்கா

தாளம்:- திஸ்ரத்ரிபுடை




கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி

அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி

அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே

அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.

கருத்துரை:-கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின்
வயிற்றில் இருந்து  கரு முற்றிப் பக்குவம் அடைந்து
 கடைசியில் பூமியில் வந்து பிறந்து  குழந்தையின் வடிவத்தில்
தோன்றி  குழந்தையை அங்கு கழுவியெடுத்து  சுரக்கும்
முலைப்பாலை ஊட்டுவிக்க  தரையிலே கிடந்தும், அழுதும்,
 உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும்,  நடை பழகியும்,
 அரைநாண் கட்டியும்,  காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,
 பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும்,  முதிர்ந்து
வளர்ந்து வயது ஏறி,  அருமையான பெண்களின்  நட்பைப் பூண்டு  நோய்வாய்ப்பட்டு  அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்)
 உனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?

 சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி)
வெற்றி வானர அரசர்களாகவும்,  ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன்  கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும்,  நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும்,  ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்  இன்னின்ன வகைகளிலே வந்து  இப் பூமியில் சேர்ந்திட,
 (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,  அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை  வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்
புகழும் குணம் வாய்ந்த மருமகனே,  பிரம்மாவையும் தண்டித்து, கோபித்து,
 (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து,  அன்புடன்  அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்  வீற்றிருக்கும் பெருமாளே.

தொடரும் திருப்புகழ் ................. தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment