Tuesday, September 17, 2013

சுபகாரியங்கள் தடையின்றி நடைபெற புரட்டாசியைப் போற்றுவோம்!


சுபகாரியங்கள் தடையின்றி நடைபெற புரட்டாசியைப் போற்றுவோம்!


தமிழ் மாதங்களில் புண்ணியம் சேர்க்கும் மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது. திருவேங்கடமுடையானுக்கு உகந்ததாகக் கருதப்பட்டாலும் அனைத்துத் தெய்வங்களுக்குரிய விழாக்கள் நிறைந்த மாதமாகக் திகழ்கிறது. இம்மாதத்தில் விரதம் இருந்து வேங்கடவனை வழிபட்டால் மகாலட்சுமி மகிழ்வாள். இதனால் செல்வச் செழிப்பு ஏற்படும். உடல் நலம் வளம் பெறும்; நோய் எதிர்ப்பு சக்தி உடலில் கூடும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகளில் பகல் பொழுதில் உபவாசமிருந்து ஸ்ரீவெங்கடா ஜலபதியை வழிபட்ட பின், உணவு உண்டால் சனியின் தாக்கம் அனைத்தும் குறையும் என்பர். மேலும் அன்று ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட பலம் கூடும்.

அறிவியல் ரீதியாக பூமி மற்றும் கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமி, சூரியனின் வட கிழக்கில் பங்குனி மாதமும், தென்மேற்கில் புரட்டாசி மாதமும் வருகிறது. ராசி சக்கரத்தில் கன்னி ராசி தென்மேற்கில் உள்ளது. இந்த வேளையில் இறை வழிபாடுகள் போற்றப்படுகின்றன. இம்மாதம் முன்னோர்களுக்குரிய மாதமாகக் கருதப்படுவதால் பித்ருக்கள் பூஜைக்கு இம்மாத அமாவாசையைப் பெரிய அமாவாசை என்றும் அழைப்பர். சூரியன் கன்னி ராசியில் நுழையும்போது எமதர்மராஜன் பித்ருக்களை பூமிக்கு செல்ல அனுமதிக்கிறார். அந்த வேளையில் இறைவனடி சேர்ந்தவர்கள் நினைவுகூர்ந்து, சாஸ்திரம் கூறும் வழிகாட்டுதல்படி புனித நீர் நிலைகளில் வேதம் அறிந்த விற்பன்னர்கள் உதவியுடன் பிதுர்பூஜை செய்தால் பித்ருக்கள் மகிழ்ந்து ஆசிர்வதிப்பார்கள். இதனால் சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

குறிப்பாக புரட்டாசி பௌர்ணமிக்கு அடுத்த பிரதமை முதல் அமாவசைக்கு அடுத்துள்ள பிரதமை வரை உள்ள பதினாறு நாட்கள் மாளயபட்சம்(மஹாளயம்) என்று சொல்லப்படுவதால் இந்தக் காலகட்டத்தில் பிதுர்பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாட்களில் ஏழைகளுக்கு அன்னதானம், அந்தணர்களுக்கு ஆடை தானம், அளித்தல் ஆகிய தர்மங்கள் மேன்மேலும் புண்ணியம் சேர்க்கும் என்றும் கூறுகின்றனர். இம்மாதத்தில் வரும் அமாவாசை மேன்மேலும் பல விதங்களில் சிறப்பினைப் பெறுகிறது. முப்பெருந் தேவியர்களை வழிபடும் விழாவான நவராத்திரிப் பண்டிகை புரட்டாசி அமாவாசையைக் கணக்கில் கொண்டு ஆரம்பமாகிறது.

ஆடியைத் தொடர்ந்து அம்மனின் ஆலயங்கள் இம்மாதத்திலும் சிறப்பிக்கப்படுவது போல், பெருமாள் கோயில்களிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் சன்னதியில் நவராத்திரி விழா நடைபெறும். தினமும் பெருமாளுக்கு ஒரு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். தாயாருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்வார்கள். தென்மேற்கு திசை கன்னி மூலை என்று கூறப்படுவதால் கோயிலில் இந்தக் கன்னி மூலையில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மிகவும் போற்றப்படுகிறார். புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மூலையில் அமைந்திருப்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் விநாயகர் வழிபாடு கூடுதல் பலன்களைத் தரும்.

இம்மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்திசியில் சிவாலயங்களில் ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவதைக் தரிசிக்கலாம். மேலும் புரட்டாசி மாத சுக்லபட்ச திரிதியை பலராமர் அவதார தினமாகவும், சுக்லபட்ச துவாதசி அன்று வாமன ஜெயந்தி தினமாகவும் கொண்டாடப்படுகிறது. தெய்வ வழிபாட்டிற்கும், முன்னோர்களின் வழிபாட்டிற்கும் புரட்டாசி மாதம் உகந்ததாக இருப்பதால் இம்மாதம் புண்ணியம் நிறைந்த மாதம். என்று போற்றப்படுகிறது.

No comments:

Post a Comment