Monday, January 7, 2013

திருப்பாவை பாடல் 24 - திருப்பள்ளியெழுச்சி 4




திருப்பாவை பாடல் 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.








பொருள்: மகாபலி இந்த உலகத்தை
கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால்
அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே!
உன் திருவடிகளுக்கு வணக்கம்.

ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம்.

சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.

கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில்
அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்.

கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை
இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே!
உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.

பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும்
அவர்களை உன் கையிலுள்ள வேலால்
அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம்.

உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

விளக்கம்: இந்த பாசுரம் மிக முக்கியமானது.
இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம்.
இதை போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன்
பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை
அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக்
கொள்வார்கள்.



திருப்பள்ளியெழுச்சி 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு கோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள்புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 








திருப்பெருந்துறையில் கோவில் கொண்டுள்ள
சிவபெருமானே உன்னை வணங்குவதற்காக
வீணை இசைப்போரும் யாழினை உடையோரும்
ஒருபக்கத்தில் நிற்கின்றனர். வேத மந்திரங்களை
படுபவர்களும் துதி பாடுபவர்களும் மாலை
ஏந்தியவர்களும் ஒருபக்கம் உள்ளனர். உன்னை
கும்பிட்ட கைகளை உடையோரும் ஆனந்தக்
கண்ணீர் சிந்தி துவண்டிருப்போரும் ஒரு பக்கம்
உள்ளனர். தலையில் கை வைத்து வணங்குபவர்களும்
உன் கோவிலில் சூழ்ந்து நிற்கின்றனர் ஆனால்
ஒரு தகுதியும் இல்லாத என்னையும் ஆட்கொண்டு
அருள்புரியும் எம்பெருமானே துயில் நீங்கி பள்ளி
எழுந்தருள்வாயாக

No comments:

Post a Comment