Friday, January 4, 2013

திருப்பாவை பாடல் 21 - திருப்பள்ளியெழுச்சி பாடல் 1

திருப்பாவை பாடல் 21


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்








பொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள்
நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும்
வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு
உரிமையாளரான நந்தகோபனின் மகனே!
கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால்
போற்றப் படும் வலிமையானவனே! அந்த
வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே!
உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக!
உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து,
உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது
போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட
காத்திருக்கிறோம்.
எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

விளக்கம்: மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில்
விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்!
ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம்
உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால்
நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள்
அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம்.
அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப்
பெண்கள். ஆம்...ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த
ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே!
அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக்
கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை.
பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால்,
அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது
என்பது இப்பாடலின் உட்கருத்து.



திருப்பள்ளியெழுச்சி பாடல் 1


போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!






பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை
மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள்
சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும்
சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே!
என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின்
முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது.
உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி
வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன்
அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு
அருள் செய்வாயாக!

விளக்கம்: திருப்பெருந்துறை எனப்படும்
ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதர்
அருள்புரிகிறார். வாழும் காலத்தில் பல
இன்பங்களை நாம் அனுபவிக்க வேண்டி
இறைவனிடம் நாம் வேண்டுகிறோம். ஆனால்,
அவையெல்லாம் நம் உடலுக்கு தற்காலிக
சுகமே தரும். ஆத்மாவுக்கு சுகம் வேண்டுமே!
என்ன செய்வது! ஆத்மநாதராகிய சிவபெருமானைச்
சரணடைந்தால் பேரின்பத்தை அடையலாம்.
மாணிக்கவாசகர் பாண்டியநாட்டின் மந்திரியாகவே
இருந்தவர்! அவர் அனுபவிக்காத போகங்களா?
ஆனால், இறைவன் அவரை என்ன செய்தான்?
போர்ப்படைக்கு குதிரை வாங்கும் சாக்கில்
தன் தலத்துக்கு வரவழைத் தான். உண்மையான
இன்பம் என்ன என்பதை அறிய வைத்தான்.
அமிழ்தினும் இனிய திருவாசகத்தை எழுத
வைத்தான். அவரை ஆட் கொண்டான். நாமும்
அவரது கவியமுதத்தில் மூழ்கி எம்பெருமானின்
திருவடிகளை அடைவோமே! இத்தலம்
அறந்தாங்கி அருகில் உள்ளது.

No comments:

Post a Comment