Tuesday, January 1, 2013

திருப்பாவை பாடல் 17 - திருவெம்பாவை பாடல் 17



திருப்பாவை பாடல் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.



பொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும்,
உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம்
செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே!
தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற
இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம்
தலைவியான இளகிய மனம் கொண்ட
யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற
முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும்.
விண்ணையே கிழித்து உன் திருவடிகளால்
உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள்
கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும்.
செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த
செல்வத்திருமகனான பலராமனே! நீயும்,
உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து
எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

விளக்கம்: திருப்பாவையில் வாமன
அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள்.
மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள்
சிறப்பித்திருக்கிறாள். ஓங்கி உலகளந்த உத்தமன்
பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப்
பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம்
அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள்.
அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை
அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம்
அடங்கினால் இறைவனை அடைவது உறுதி
என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து
அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள்
தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது
இப்பாடல் உணர்த்தும் கருத்து.




திருவெம்பாவை பாடல் 17

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.




பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய
கருங்கூந்தலை உடைய பெண்களே!
செந்தாமரைக் கண்ணனான நாராயணன்,
பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத
இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய
சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும்
எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற
திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன்
போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை
உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும்,
நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி
நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள்
மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி
அவன் தரிசனம் காண தயாராவோம்.

விளக்கம்: இறைவனைத் தேடி நாம் கோயிலுக்குச்
செல்ல வேண்டியதில்லை. இதோ! அவனே
வருகிறான் அழகிய சப்பரத்தில்! இப்போது
கூடவா அவனைத் தரிசிக்க தயக்கம்! அவன்
வருமுன் நீராடி உடல் சுத்தமாகி, நமசிவாய
எனச் சொல்லி நின்றால், அவன் நமக்கு சேவகன்
போல் சேவை செய்வான். வேறெதுவும் அவன்
எதிர்பார்ப்பதில்லை என்பது இப்பாடல்
சொல்லும் கருத்து.

No comments:

Post a Comment