Wednesday, November 14, 2012

சிவ வடிவங்கள் 64 - 24. ஜ்வராபக்ன மூர்த்தி

24. ஜ்வராபக்ன மூர்த்தி



மாபலி மன்னனின் மகன் வாணாசுரன். அவனுக்கு ஆயிரம் கைகள் உண்டு. அவனது மனைவி சுப்ரதீகை. அவன் நர்மதை நதியோரத்தில் ஒரு சிவலிங்கம் அமைத்து அதற்கு தினமும் ஆயிரம் முறை அர்ச்சனை செய்து வந்தான். சிவபெருமான் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு உலகம் முழுவதும் அரசாட்சி செய்யவும், நெருப்பினால் ஆன மதில் சுவரும், அழிவற்ற நிலையும், தேவர் அடித்தாமரை அன்பும் வேண்டுமெனக் கேட்டான். அதன்படியே கொடுத்தார். இதனால் உலகம் முழுவதையும் தன் வசம் கொண்டான். மீண்டுமொருமுறை சிவபெருமானை தரிசிக்க விரும்பி வெள்ளிமலை அடைந்தான். அங்கு ஆயுரம் கைகளிலும் குடமுழா வாசித்தான். மீண்டும் சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என்று கேட்டதிற்கு இறைவா தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எனது சோணிதபுரத்தில் வசிக்க வேண்டும் என்றுக் கேட்டான். பின் சிவபெருமான் குடும்ப சமேதராய் அவனது மாளிகையிலேயே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வாணாசுரன் தேவர் உலகத்தினர் அனைவரையும் போருக்கு இழுத்து தோற்கடித்ததால் அனைவரும் ஓடி விட்டனர். எøவே தன்னுடன் போர்புரியும் படி சிவனை அழைத்தான் . சிவனோ எனக்கு பதிலாக கண்ணன் வருவான் என்றார். கண்ணன் எப்பொழுது வருவான்? என்று கேட்டார். சிவனும் உன் மகள் கண்ணன் மகனை விரும்புவாள் அந்த செய்தி கிடைக்கும் போது வருவான் என்றார். அதன்படி நடைபெற்றது. 

வாணாசுரனின் மகள் உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தக்கும் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த கண்ணன் வாணாசுரனுடன் போர்புரிய வந்தான். முதலில் உள்ள வாசலில் விநாயகனை வணங்கினான். இரண்டாம் வாசலில் முருகனை வணங்கினான். மூன்றாம் வாசலில் உமாதேவியரிடம் ஆசி வாங்கி உள் சென்றான். அங்கே நான்காவது வாசலில் சிவபெருமானை கண்டான். உடன் சிவபெருமான் சண்டைக்கு கண்ணனை அழைத்தார்.

கண்ணன் பின் வாங்கினான். இருப்பினும் சிவபெருமான் தேற்றி, வாணாசுரனிடம் நடைபெறும் சண்டையில் நீயே வெல்வாய், அதற்கு முன் எண்ணிடம் போர் புரி என்ற படியே இருவருக்கும் போர் நடைபெற்றுக் கொண்டே யிருந்தது. எத்தனைக் காலமேன யாராலும் சொல்ல முடியாத படி நீண்டது. முடிவில் சிவபெருமான் ஒதுங்க போர் நின்றது. பின் வாணாசுரனுடன் படு பயங்கரப் போர் நடைப்பெற்றது. இறுதியில் அவனது கரங்கள் ஒவ்வொன்றும் துண்டானது. சிவனை தொழுத கைகள் மட்டும் வெட்டாமல் விடப்பட்டது. மனமாறிய வாணாசுரன் மன்னிப்பு வேண்ட, மன்னிக்கப்பட்டு மறுபடியும் அவனது கரங்கள் இணைந்தன. அவன் மறுபடியும் குடமுழா வாசிக்க பணியமர்த்தப் பட்டான். அவனது மகள் உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கண்ணன் - சிவபெருமான் இடையே நடைபெற்ற போரில் தொடுத்த சீதள சுரத்தை, சிவபெருமான் விட்ட உஷ்ண சுரமானது ஒரு கணத்தில் வென்றது. அது மூன்று சிரம், நான்கு கரம், ஒன்பது விழிகள், மூன்று கால்களுடன் இருந்தது. தீராத சுரம் கண்டோர் இந்த வடிவை வணங்க சுரம் குறையும். இவ்வுருவமே ஜ்வராபக்ன மூர்த்தி யாகும். அவரை நாகபட்டிணம் அருகேயுள்ள சாட்டியகுடியில் காணலாம். வேதநாயகி இறைவி திருநாமமாகும். வெப்ப நோய்க்குரிய தேவதை ஜ்வர தேவர் ஆவார். இங்குள்ள அவரை வணங்க வெப்ப நோயின் தீவிரம் குறையும். வெள்ளை அல்லி அர்ச்சனையும், சுக்கு கசாய நைவேத்தியமும் புதன் சோம வாரங்களில் கொடுக்க நோய் தீரும். மேலும் இறைவனுக்கு பசுந்தயிர் அபிசேகம் செய்ய சுரம் குறையும்.

No comments:

Post a Comment