Thursday, October 11, 2012

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா



திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா: நாளை புறப்படுகிறார் சரஸ்வதி அம்மன்!



தடிக்காரன்கோணம்: திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க தேவாரத்தட்டு சரஸ்வதி அம்மன் யானை மீது நாளை (12ம் தேதி) பக்தர்கள் முன்செல்ல சிங்காரி மேளத்துடன் புறப்படுகிறார். திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மன்னர், தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றியபின் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. 

நவராத்திரி விழாவில் கலந்துகொள்ளும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன் உதித்த நங்கையம்மன் உள்ளிட்ட மூன்று சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு நடக்கும் நவராத்திரி விழாவில் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 15ம் தேதி துவங்குகிறது. இதனால் மூன்று சாமி சிலைகளும் இந்த விழாவில் பங்கேற்க நாளை (12ம் தேதி) ஊர்வலமாக புறப்பட்டுச் செல்கிறது. இன்று (11ம் தேதி) அதிகாலையில் கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரம் முன்உதித்த நங்கையம்மன் ஊர்வலமாக புறப்படுகிறார். இவருக்கு தெருக்கள் தோறும் பக்தர்கள் பரவசத்துடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கின்றனர்.

முன்உதித்த நங்கையம்மன் பத்மநாபபுரம் அரண்மனைக்கு நேரடியாக வந்தடைகிறார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் வேளிமலை முருகன், பக்தர்கள் புடைசூழ அரண்மனை வந்து சேருகிறார்.இதைத் தொடர்ந்து 12ம் தேதி காலையில் 7 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையின் மேல்மாடியில் உள்ள பூஜையறையில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் உடைவாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஜோசப், மன்னரின் உடைவாளை எடுத்துக்கொடுக்க, குமரி தேவசம்போர்டு ஆணையாளர் ஞானசேகர் பெற்றுக்கொள்கிறார். 

விழாவில் நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவை நடக்கிறது. இதைத் தொடர்ந்து நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு சுசீந்திரம் முன்உதித்த நங்கையம்மன் முன்னே செல்ல வேளிமலை முருகன் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் யானை மீதும் அமர்த்தி பவனியுடன் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சாமி சிலைகளுடன் போலீஸ் படை மற்றும் திரளான பக்தர்கள் நடந்து செல்வர். மூன்று சாமி சிலைகளும் இரவில் குழித்துறையில் தங்கிவிட்டு 13ம் தேதி காலை அங்கிருந்து புறப்படும். இந்த விக்ரகங்களுக்கு தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. களியக்காவிளை பி.பி.எம்., ஜங்ஷன் முதல் தமிழக எல்லை வரை ரோட்டின் ஓரங்களில் விளக்குகள், பூஜை தட்டுகள் வைத்து பக்தர்கள் வரிசையாக நின்று வரவேற்பு அளிக்கின்றனர். 

எல்லையில் கேரள அதிகாரிகள் வந்து இந்த ஊர்வலத்தை தங்கள் மாநிலத்திற்குள் வரவேற்று அழைத்து செல்வர். களியக்காவிளையில் வைத்து தமிழக அதிகாரிகள் மன்னரின் வாளை கேரள அதிகாரிகளிடம் ஒப்படைப்பர். களியக்காவிளையில் இருந்து புறப்படும் ஊர்வலம் அன்று இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோயிலை வந்தடையும்.14ம் தேதி காலையில் நெய்யாற்றின்கரையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மநாமசுவாமி கோயிலில் சென்றடைகிறது. தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை பூஜைபுரை என்ற இடத்தில் பூஜைக்காக வைக்கப்படுகிறது. வேளிமலை முருகன் சிலை ஆரியசாலையில் உள்ள சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன் உதித்த அம்மன் சிலை செந்திட்டை அம்மன் கோயிலிலும் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து நவராத்திரி கொலுமண்டபத்தில் 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் சாமி சிகைள் ஊர்வலமாக குமரி மாவட்டத்தை நோக்கி புறப்படுகிறது.

No comments:

Post a Comment