Monday, October 15, 2012

இன்று அரசமரத்தை வழிபடுங்க..

இன்று அரசமரத்தை வழிபடுங்க.. அனைத்து வளமும் பெறுங்க!




சூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசையன்று செய்யப்படும் வழிபாடுகள், தவம் போன்றவை நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறும். அன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது. அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதற்குக் காரணம், சூரிய சந்திர கிரணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும்; உடல் நலம்பெறும். அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமே அரச மரம். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு. அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும்பொழுது அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன், அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது. இம்மரத்தை அச்வத்தம் என்றும் கூறுவர். அச்வத்தம் என்ற சொல்லிற்கு இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை என்று பொருளாகும். கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும். அரச மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது; தொடக்கூடாது. ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம். அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும் போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் சித்திகளும்; ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும்; ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும்; பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும்; நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன. சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் சுலோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினி
அக்கிரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம:

இந்த சுலோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின்முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். இந்த வழிபாட்டை அமாசோமவார விரதமென்று கூறுவர். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்; ஆடைகள் வாங்கி வழங்கலாம்; மூத்த சுமங்கலிகளின் கால்களில் வணங்கி ஆசிர்வாதம் பெறலாம். குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணமும், சுமங்கலிகளுக்கு கர்ப்பப்பைக் கோளாறு நீக்கமும் உடல்நலமும், வயதானவர்களுக்கும் ஆடவர்களுக்கும் பித்ருசாப தோஷ நிவர்த்தியும் தருவது அரச மர வழிபாடு. அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.

No comments:

Post a Comment