Thursday, October 18, 2012

சிவனின் நவ தாண்டவம் - நவராத்திரியில்

நவராத்திரியில் சிவனின் நவ தாண்டவம்


நவராத்திரி என்றால் அம்பிகைக்கு உகந்த சிறப்பான ஒன்பது நாட்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் நவராத்திரியில் சிவ தாண்டவங்களும் நிகழ்கின்றன என்ற செய்தி வியப்பை அளிக்கிறதல்லவா? கயிலைநாதனாகிய பரமேஸ்வரன் அமாவாசை, பவுர்ணமி தினங்களிலிருந்து பதின்மூன்றாவது நாளாகிய திரயோதசியில், மாலை 4.00 மணிக்குமேல் பிரதோஷ காலத்தில் தாண்டவம் ஆடுவதாகவும், இச்சமயத்தில் சிவன் கோயிலில் சுவாமி வலம் வருவதும்; தேவாரம், திருவாசகம், வேதபாராயணம் ஆகியவற்றுடன் திருச்சுற்று வழிபாடும் மிக நன்மையை அளிக்கும் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த மாலை நேர ஆட்டத்தில் பரமனின் ஆடலுக்கு நந்தி மத்தளம் முழங்க, நாரதர் யாழிசைக்க, வாணி வீணைமீட்ட, வானும் புவியும் வணங்கி மகிழ்ந்திட, ஓம் ஓம் என ஒலிக்கும் ஞானவேளையில் அடியார் பணிகின்ற போது, ஈஸ்வரன் ஒரு குழந்தையைப்போல ஆடி மகிழ்கின்றாராம். பரமேஸ்வரன், உலகமே நீரில் மூழ்கும் பிரளய காலத்தில் பிரளய தாண்டவம் அல்லது ஊழிக்கூத்து என்ற நடனத்தை ஆடுவதாகவும்; இதை அம்பிகை மட்டுமே பார்த்து ரசிக்கிறாள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதை தேவியின் துதியான லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மஹாப்ரளய ஸாக்ஷினி என்ற நாமம் தெளிவுபடுத்துகிறது.

இந்த தாண்டவங்களைத் தவிர பரமேஸ்வரன் ஒன்பது வகையான தாண்டவங்களை ஆடுவதாகவும்,அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப உடலை வளைத்தும், கால்களை மாற்றியும், கால் விரல்களால் கோலமிட்டும் ஆடுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆண்கள் ஆடும்போது தாண்டவம் என்றும், பெண்கள் ஆடும்போது லாஸ்யம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த ஆடல்களை பரமேஸ்வரன் நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையாக ஆடுகிறார். இவரது ஆட்டத்தின்போது வரையப்படும் கோலங்களிலிருந்து ஒவ்வொரு தேவியாக வெவ்வேறு பெயருடன் நவதுர்க்கையாக வெளிப்படுகிறாள் அம்பிகை. இனி ஒன்பது வகை தாண்டவங்களையும் அதற்குரிய தேவிகளையும் அறியலாம்.
நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம். வலது காலைத் தரையில் ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலம். இதில் வரையப்பட்ட கோலம் ரிஷி மண்டல கோலம் எனப்படுகிறது. இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. நவதுர்க்கைகளில் சைலபுத்ரி அல்லது சைலஜா என்ற தேவி முதல் நாளுக்குரிய தேவியாகிறாள்.

இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம். பகலும் மாலையும் கூடும்வேளையில் இடதுகால் விரலால் பரமசிவன் இடும் கோலத்தின் பெயர் ஸப்த ஒலிக்கோலம். இக்கோலத்திலிருந்து வெளிப்பட்ட கூஷ்மாண்டாதேவி இரண்டாள் நாள் வழிபாட்டுக்குரியவள்.

மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம். பரமேஸ்வரன் இடது கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம். இந்த மூன்றாம் நாளுக்குரிய தேவி ப்ரம்மச்சாரிணி என்ற பெயருடன் விளங்குகிறாள்.

நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம். ஈஸ்வரன் திருவாலங்காடு என்ற இடத்தில் தனக்குச் சரியாக ஆடிய காளியை இந்தத் தாண்டவத்தின் மூலம்தான் தோற்கச் செய்தார். ஒரு காலைத் தரையில் ஊன்றி மற்றொரு காலை தோளுக்கு இணையாக உயர்த்தி ஆடும் நடனம். இந்த ஆட்டத்தில் வரையப்பட்ட பிரணவ ஒலிக்கோலத்திலிருந்து தோன்றிய சந்த்ரகாந்தா தேவி நான்காம் நாளுக்குரிய தேவியாவாள்.

ஐந்தாம்  நாள் : புஜங்க தாண்டவம். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற தேவர்களும் அசுரர்களும் முயற்சித்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதன் வீரியத்தை தேவர்களால் தாங்கமுடியாமல் தவித்திருந்த நிலையில் ஈசன் அக்கொடிய நஞ்சை விழுங்கி நீலகண்டன், நஞ்சுண்டேஸ்வரன் என்ற பெயர்களைப் பெற்றார். அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் எனப்படும். ஈசன் புஜங்க தாண்டவக் கோலம் வரைந்தார். இதிலிருந்து ஸ்கந்தமாதா என்ற பெயருள்ள தேவி ஐந்தாவது நாளுக்குரிய தேவியாகத் தோன்றினாள்.


ஆறாவது நாள் : முனி தாண்டவம். சிறந்த சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்தபோது, அதற்கேற்ப சிவன் ஆடி முனிவரை மகிழ்வுறச் செய்தார். அதனால் இதற்கு முனி தாண்டவமென்ற பெயர் ஏற்பட்டது. சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட முனி தாண்டவக் கோலத்திலிருந்து தோன்றிய காத்யாயனி தேவி ஆறாவது நாளின் தேவியானாள்.

ஏழாவது நாள் : பூத தாண்டவம். பரமேஸ்வரன் யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பல வகை ஆயுதங்களை ஏந்தி பூத தாண்டவக் கோலம் வரைந்தபடி ஆடுகிறார். இந்தக் கோலத்தில் உருவான தேவி ஏழாவது நாளுக்குரிய காலராத்ரி தேவி எனப்படுகிறாள்.

எட்டாவது நாள் : சுத்த தாண்டவம். தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களினால் அல்லல் அடைந்து சிவனை வேண்ட, பரமசிவன் தீய சக்திகளை அழித்து ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம் எனப்படும். இந்தக் கோலத்திலிருந்து உருவான தேவி மஹாகவுரி என்ற பெயர் கொண்டவள். நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபட வேண்டிய தேவியாவாள்.

ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம். நவரசங்களையும் மிக அழகாக வெளிப்படுத்திய நவரசக் கோலத்திலிருந்து, சிவன் மகிழ சித்திதாத்திரி என்ற தேவி தோன்றினாள். இவளே ஒன்பதாம் நாள் வழிபாட்டுக்குரிய தேவியாவாள்.

நவராத்திரியில் ஒன்பது நாட்களிலும் முறைப்படி இந்த தேவிகளை வழிபட்டு பல நன்மைகளை அடையலாம்.

முதல் நாள் - ஆஸ்துமா சர்க்கரை வியாதி நிவாரணம்.
இரண்டாம் நாள் - கடன் தொல்லையிலிருந்து விடுதலை.
மூன்றாம் நாள் - வயிறு, வாய்வுத் தொலை நீங்கிவிடும்.
நான்காம் நாள் - திருமணம் நடைபெறும்.
ஐந்தாம் நாள் - அன்போடுகூடிய மகிழ்வான இல்லறம்.
ஆறாம் நாள் - விஷமுறிவு, நோய் குணமடையும்.
ஏழாம் நாள் - கண்கள் தொடர்பான நோய் தீரும்.
எட்டாம் நாள் - நோயற்ற வலுவான தேகம் பெறலாம்.
ஒன்பதாம் நாள் - வாழ்க்கைக்கு வேண்டிய நலன்கள் சேரும்.

ஸ்ரீராமருக்கு பரசுராமர் இந்த நவராத்திரி வழிபாட்டினைக் கூறியதாகவும், ஸ்ரீராமர் வழிபட்டு நலன்களடைந்ததாகவும் புராணம் கூறுகிறது. சும்பன், நிசும்பன், சண்டன், முண்டன், மஹிஷாசுரன் போன்ற தீயசக்தி கொண்ட அசுரர்களை வதம்செய்த அன்னை பராசக்தி, நாட்டைப் பிடித்துள்ள தீய சக்திகளையும், நம் மனதிற்குள் தாண்டவமாடும் தீய எண்ணங்களையும் அழித்து, துணைபுரிந்து, எல்லா நலன்களையும் அளிக்க வேண்டுமென்று அம்பிகையை இந்த ஒன்பது நாட்களும் வழிபடுவோம். மிகத் தீவிரமான பக்தி நெறியைக் கடைப்பிடிக்க இயலாதவர்களும் பிரார்த்தனை மூலம் நற்பயனைப் பெறமுடியும். அன்னை கருணையே உருவானவள். நல்லதை நாட்டி, தீயதை ஓட்டி நம்மைக் காத்தருள்வாள்.

No comments:

Post a Comment