Friday, September 21, 2012

புரட்டாசி மாதத்தின் சிறப்பு




புண்ணிய மாதம் புரட்டாசி



ஓவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. புரட்டாசி மாதத்தின் சிறப்பு சனிக்கிழமை. சனிக்கிழமை ஸ்ரீமந் நாராயணனை பூஜை செய்வதற்கு உகந்த நாள். இந்தப் புரட்டாசியில் விளக்கேற்றி வைத்து பெருமாளுக்கு பூஜை செய்வது புண்ணியம் அளிக்கும் செயல்.

புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த நாள். பிரம்மா படைக்கிறார். விஷ்ணு அருள் பாலிக்கிறார். ருத்ரன் அனைவருக்கும் சாந்தியளிக்கிறார்.

இவ்வகையில் விஷ்ணுவின் அருள்தான் உலகத்தை பரிபாலித்துக் கொண்டிருக்கிறது.

விஷ்ணுவின் அவதாரங்கள் பல என்றாலும் முக்கியமாக 10 அவதாரங்களை நாம் போற்றிக் கொண்டாடுகிறோம். இவற்றில், மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள் வேதத்தைக் காப்பதற்கும், அசுரனை அழிப்பதற்கும் ஏற்பட்ட அவதாரம். மேலும், நரஸிம்ம அவதாரமும், வாமன அவதாரமும் மிகவும் சிறப்பானவை.

நரஸிம்ம அவதாரமானது எங்கும் நிறைந்துள்ளவன் பரம்பொருள் என்பதைத் தெரியப்படுத்துவதற்கும், இறைவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தப் பொருளிலும் தோன்றுவான் என்பதற்காகவும் எடுக்கப்பட்ட அவதாரம்.

அப்பனைப் போல் பிள்ளை என்பது நியதியில்லை. தாயைப்போல் பிள்ளை என்பதுதான் நியதி. அதைக்காட்டுவது நரசிம்ம அவதாரத்தின் வரலாறு. இரண்யகசிபு அசுரபலம் உள்ளவன். அவனுடைய பிள்ளையான பிரஹலாதன் அசுரனாக இருக்கவில்லை. அதற்குக் காரணம், அவனுடைய தாய் சதாசர்வ காலமும் நாத உபாசனைகளைக் கேட்டு, எந்நேரமும் பகவானையே தியானித்து

வந்ததில், அந்த ஸம்ஸ்காரம் அந்தக் குழந்தைக்கும் இறங்கி, பிறக்கும் போதே பக்தனாகப் பிறந்தது. இதன்படி, தாயைப் போல பிள்ளை என்பது உறுதியாகிறதுதானே!

எனவே, இந்தக் கலியுகத்தில் பகவானின் அவதாரங்களை நாம் தெரிந்து கொண்டு, அவனை பூஜை செய்து வழிபடுவதன் மூலம் பெரும் புண்ணியத்தை அடைகிறோம். அதுவும் சாதாரண நாட்களில் செய்யும் போது குறைவான பலன். விசேஷ நாட்களில் செய்யும் போது அதிக பலன் நிச்சயம் உண்டு. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் பஜனை முதலியவற்றைச் செய்து, திருப்பதி ஏழுமலையானையும் சகல விஷ்ணு ஆலயங்களிலும் வழிபட்டு, பிரகலாதனைப் போன்று பக்தியிற் சிறந்த பிள்ளைப் பேறு அடைய பிரார்த்தனை செய்வோம்.

1 comment: