Thursday, December 26, 2013

வேதபுரி மாமா குட்டிக் கரணம் போட்ட காரணம் தெரியுமா !!!



வேதபுரி மாமா குட்டிக் கரணம் போட்ட
காரணம் தெரியுமா !!!

தகவல்: ஸ்ரீ ஹரிஹரன்




மஹா பெரியவா தினமும் விடியற்காலை மூன்று
மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி ஜபத்தை
முடித்துக் கொண்டு ஸ்நானம், பூஜையை செய்வார்கள்.

ஸ்ரீ பாலு தினமும் விடியற்காலையில் மடியாக,
ஸ்நானத்திற்க்கு வேண்டிய ஜலத்தை கிணற்றிலிருந்து
இரண்டு பெரிய குடங்களில் கொண்டுவந்து வைப்பார்.
அதற்குள், ஸ்ரீ வேதபுரியோ ஸ்ரீ ஏகாம்பரமோ பெரியவா
கொட்டகைக்கு வேண்டிய ஜலத்தை சில மரக்குடங்களில்
ஜன்னல் வழியாக கொடுப்போம்.

பெரியவா தனது அறையைத் தானே சுத்தம் செய்து ஜலம் தெளித்துவிட்டு ஒரு மணி ஜபத்திற்கு ஆசனம் போட்டுக்
கொண்டு உட்காருவார்கள்.

சிஷ்யர்கள் பஞ்சாங்கம் படித்து த்தி, வார, யோக, நக்ஷத்திரங்கள் கரணங்களைச் சொல்லுவோம். அவர்களும் ஒரு மணி ஜபம் முடித்துவிட்டு ஸ்நானத்திற்குத் தயார் செய்துகொள்வார்கள்.

ஒரு நாள் பெரியவா மெளனமாக தனது காரியங்களைச்
செய்துகோண்டு ஒரு மணி ஜபமும் செய்ய ஆரம்பித்து
விட்டார்கள். பெரியவா, ஜபம் முடிந்துக்கொண்டு உள்ளே
இருந்து மரக்குடங்களை ஜன்னல் வழியாக வெளியில்
தூக்கிப் போட்டுக்கொண்டும், தனது அறையை சுத்தம்
செய்துகொண்டும் இருந்தார்கள். அன்று பஞ்சாங்கம்
படிக்கவில்லை. பெரியவாளே முதல் நாளின் திதி, வார,
நக்ஷத்திர, யோக, கரணங்களை கணக்கில் வைத்துக்கொண்டு
அன்று ஜப சங்கல்பம் செய்து கொண்டார்கள். ஜபம்
முடிந்தவுடன் பெரியவாளுக்கு கரணங்களில் சந்தேகம் வரவே,
தான் செய்தது சரிதானா என்று தெரிந்துகொள்ள வேண்டி, மெளனமாதலால், ஜன்னல் அந்தப்பக்கம் ஸ்ரீ வேதபுரியிடம்
மேடையில் தனது தலையை முட்டி கரணம் போடுவதுபோல் கேட்டார்கள்.

ஸ்ரீ வேதபுரியோ, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு “தெரியுமே”
என்றார். பெரியவா கையைக் காட்டி, “சொல்” என்பதுபோல் ஜாடை செய்தார்கள்.

இவரோ, “தன்னை கரணம் போடத் தெரியுமான்னு கேட்கின்றார்” என்று நினைத்து, “தெரியும்” என்று சொல்லி,
அந்த சின்ன அறையில் குட்டி கரணமும் போட்டுவிட்டார்.
அவர் உடல் பட்டு, ஸ்ரீ பாலு கொண்டு வந்த மடி ஜலம்
கொட்டிவிட்டது.

பெரியவாளோ ஜன்னலருகில் இவரைக் காணவில்லை என்பதால்,
தனது அறையை சுத்தம் செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து,
மறுபடியும் ஜாடையாக கேட்க,

இவரும் ”இப்போதான போட்டேன்” என்றார். தனது வஸ்திரங்களை நனைத்துக் கொண்டு ஈரத்தோடு இப்பத்தான் போட்டேன் என்றார்.
குடம் கவிழ்ந்து ஜலம் கொட்டிய சப்தம் கேட்டு சிஷ்யர்கள் வந்து பார்த்தால் இந்த கூத்து. பெரியவாளிடம் என்ன ஆயிற்று
என்று கேட்க, முறுபடியும் பெரியவா தனது காதை தொட்டுக்
காண்பித்து, பிறகு கையை பொத்திக் கொண்டு சங்கல்பம் செய்வது போல் ஜாடை காண்பித்தார்.

பின்னர், ஸ்ரீ வேதபுரியே பஞ்சாங்கத்தை படித்து அன்றைய யோக கரணத்தை சொன்னார். பின்னர் ஸ்ரீ பாலு வேறு மடி ஜலம் கொண்டு வந்தார்.

இதுவும் உம்மாச்சி தாத்தாவால் நடத்தபட்ட ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி !!!

No comments:

Post a Comment