பரமேஸ்வரமங்கலத்தில் பிரதோஷ மூர்த்தி
முக்கண்ண பெருமானுக்குரிய முக்கிய விசேஷ நாட்களில் ஒன்று பிரதோஷம். தினந்தோறும் மாலையில் வருவது பிரதோஷம் என்றாலும் வழக்கத்தில் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் திரயோதசியன்று வரும் மாலை நேரத்தையே பிரதோஷம் என சிறப்பாக அழைக்கின்றோம். இதில் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷத்தை அதிக சிறப்புடையதாகப் போற்றுகின்றனர். ஏனென்றால் சிவபெருமான் விடமுண்டு, சயனித்து எழுந்து, ஒரு சனிக்கிழமை மாலையில்தான் முதன் முதலாக சந்தியா தாண்டவத்தை ஆடினார் என்பதால் சனிப்பிரதோஷத்திற்கு சிறப்பு உண்டு. பிரதோஷ கால வழிபாடு, தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் நிலவச் செய்யும் என்று புராணங்கள் கூறுகின்றன.
பிரதோஷ காலங்களில் கோயில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்ஸவ மூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் அளவால் சிறிய மூர்த்தி. அதேபோன்று இந்த உற்ஸவமூர்த்தி உலா வருவதற்காக சிறு அளவில் அமைந்த ரிஷப வாகனம் பிரதோஷ ரிஷபம் எனப்படும். பொதுவாக இது மரத்தால் செய்யப்பட்டு பல வண்ணம் தீட்டப்பட்டதாக அமையும்.
இவ்வாறு புதிதாக செய்யப்பட்ட பிரதோஷ நாயகர், உமா தேவியுடன், பரமேஸ்வர மங்கலத்தில் உள்ள மிகப் பழமையான கனகாம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் நவ: 30ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பிரதோஷ நாளன்று ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்யப்படுகிறார். நாதஸ்வர இன்னிசை வேதகோஷத்துடன் ஆலய உட்பிராகாரத்தில் வலம் வருகிறார். முன்னதாக நவ: 29 (இன்று) விக்ரகப் பிரதிஷ்டை, யாகசாலை பூஜை வைபவங்களுடன் நடைபெறுகிறது. மேலும் இந்த வைபவத்தின் பொழுது புதிதாகச் செய்யப்பட்டுள்ள சிவகாமி அம்மன் உடனுறை நடராஜப் பெருமான் உற்ஸவமூர்த்தியும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஆளுடைநாதனின் இவ்விரு கோலங்களையும் சனிக்கிழமையன்று நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் தரிசிக்கலாம்.
தகவலுக்கு: 97890 56615
அமைவிடம்: பாலாற்றங்கரையில் சென்னைக்கும் - பாண்டிச்சேரிக்கும் இடையே 70 கி.மீ. தொலைவில் உள்ளது கைலாசநாதர் ஆலயம்.
No comments:
Post a Comment