Wednesday, October 30, 2013

புவன சுந்தரா



புவன சுந்தரா

நம் இந்திய மரபில் முதல் காதல் கடிதமாகக் கருதப்படுவது, ருக்மிணி, ஸ்ரீகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதம்தான். ஸ்ரீமத் பாகவதம் - தசமஸ்கந்தம் - 52வது சதகத்தில் இது உள்ளது. அற்புதமான நடை அழகு இந்தக் கடிதத்தில் காணப்படும். இது, எழுதிய ருக்மிணியின் சொற்களா.. இல்லை ஸ்ரீமத் பாகவதத்தைத் தொகுத்த மகரிஷியின் சொல்நடையா? எப்படி இருந்தால் என்ன.. கண்ணன் என்னும் காதலனின் கம்பீரத்தைக் காதால் கேட்டுக் கேட்டு வளர்த்தெடுத்த காதல் அல்லவா! அவனின் குணநலன்களை எல்லாம் ருக்மிணி தன் மனத்தில் தேக்கி வைத்தாள். கடிதத்தில் வெளிப்படுத்தினாள்.

ஓர் அந்தணர் மூலமாக கண்ணனை மனத்தில் வரித்து எழுதிய இந்த முதல் காதல் கடிதத்தில், அவனையே மணவாளனாக அடைய, தான் ஆசை கொண்டிருப்பதையும், எப்போது எப்படி, தன்னை கடத்திச் சென்று, கடிமணம் புரிய வேண்டும் என்ற வழியையும் காட்டி... ருக்மிணி வேண்டுகோள் விடுத்தாள்.

"அந்த: புராந்தர சரீம் அனிஹத்ய பந்தூ: த்வாமுத்வஹே கதம் இதி ப்ரவதாம் உபாயதம்... பூர்வ இத்யுரஸ்தி மஹதீ குலதேவி யாத்ரா... யஸ்யாம் பஹிர்நவவதூர் கிரிஜாம் உபேயாத்'' - குலதேவியைக் கும்பிட்டு வணங்க யாத்திரையாக வரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்து என்றாள் ருக்மிணி இந்தக் கடிதத்தில். உபாயத்தை அவளே சொல்லும் அழகு, அழகிய மணவாளனுக்கு வேலையை மிச்சப்படுத்துகிறது. ஒரு பெண்ணின் விருப்பத்தையே பூர்த்தி செய்தான் கண்ணன் என்ற ஆண்மகன் என்பதாக உலகம் பேச வேண்டும். ஒரு பெண்ணை அவள் விருப்பம் இன்றி கடத்திச் சென்றான் என்ற அவச் சொல் தன்னை அண்டக் கூடாது என்பதில் கண்ணன் மட்டுமல்ல, பாகவதம் தொகுத்த வியாசரும் குறிப்பாக இருந்தார்.

ருக்மிணி எழுதிய இந்தக் கடிதத்தை பாராயணமாகச் சொன்னால், விரைவில் திருமண பாக்கியம் கூடி வரும் என்பர்.

கடிதத்தின் முதற்சொல்லே கம்பீரத்தைக் காட்டும். கரு நிறக் கண்ணனை அழகன் என்று உலகு சொன்னாலும், தான் காதால் கேட்டு அறிந்த கண்ணனை, எடுத்த எடுப்பிலேயே புவன சுந்தரா... என, உலகில் சிறந்த அழகனே என்று விளிக்கும் ருக்மிணியின் மனத்தை என்னவென்பது? அழகு - கண்களால் கண்டு புறவுலகில் காணத் தெரிவதா, இல்லையெனின் காதால் குண நலன் கேட்டு மனத்தில் உருவத்தை வரைந்து அழகெனக் கொள்வதா? இப்படி, தம் மனம் ஒப்பிய மணாளனை ருக்மிணி அடைந்த விதத்தைச் சொல்வதே ருக்மிணி கல்யாணம் என்ற பூஜை முறை ஆனது. கிருஷ்ண ஜெயந்தியும், ருக்மிணி கல்யாணமும் நம் மரபில் பூஜைகளாக வீட்டில் செய்து, பக்தியுடன் போற்ற வேண்டிய முறைகள் ஆயின. இவற்றைச் செய்தால், சந்ததி தழைக்கும்.

No comments:

Post a Comment