Saturday, January 26, 2013

நலன் தரும் ஆதிகேசவன்




நலன் தரும் ஆதிகேசவன்!



திருமாலின் திருநாமங்களுள் பனிரெண்டு நாமாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுஸýதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்று அழைக்கப்படும் துவாதச நாமாக்கள்.

தொண்டை மண்டலத்தில் நிறுவப்பட்ட பல்வேறு முக்கிய திருமால் திருக்கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்திக்கு முழு முதல் கடவுள் என்று பொருள்படும் ஆதிகேசவன் என்ற திருநாமம் சூட்டி பெரியோர்கள் கொண்டாடினர். அவ்வகையில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு மாம்பாக்கம் கிராமத்தில் பெரியோர்களால் நிர்மாணிக்கப்பட்டதுதான் ஸ்ரீஎதிராஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு ஏற்ப கிராமம் உருவானபோதே தோன்றிய கோயில்.


இத்திருக்கோயிலில் ஸ்ரீஎதிராஜவல்லி நாயகி சமேத ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், கண்ணபிரான், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர் சகிதம் அர்ச்சாமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இத்திருத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு திருமணத் தடை நீங்கும்.

பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத நிலையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2010ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு மஹாசம்ப்ரோஷணம் நடைபெற்றது. தற்போது நித்ய பூஜை, ஆராதனைகள் குறைவின்றி நடைபெற்று வருகின்றன. இத்திருக்கோயிலில் தேசிய விடுமுறை நாட்களில் அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தினங்களில் மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், கல்யாண உற்ஸவம், சுதர்சன ஹோமம், அன்னக்கூட உற்ஸவம் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.


அவ்வகையில் வருகிற ஜனவரி 26ஆம் தேதி, குடியரசு தினத்தன்று நவகலஸ திருமஞ்சனமும், திருக்கல்யாண உற்ஸவமும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஆதிகேசவனை வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும்!

மேலும் தகவலுக்கு 98840 96463/044-2223 2543.

அமைவிடம்: திருக்கழுக்குன்றத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் திருக்கழுக்குன்றம் கருங்குழி சாலையில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment