Thursday, January 10, 2013

திருப்பாவை பாடல் 27 - திருப்பள்ளியெழுச்சி - 7

திருப்பாவை பாடல் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.




பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும்
சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள்
பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன்
இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும்
தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது.
கையில் அணியும் சூடகம், தோளில் அணியும்
பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ,
காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை
எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு.
பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில்,
கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில்
நெய் வழிய பால்சோறு உண்போம்.





விளக்கம்: கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில்
இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது.
இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின்
வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும்.
இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம்.
சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். 





சர்க்கரைப் பொங்கல்
போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது.
விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத்
துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின்
தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த
உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது
பாற்கடலையும் குறிக்கும். கண்ணா! உன் தரிசனம்
கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும்
பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம்.
இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு
நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.



திருப்பள்ளியெழுச்சி - 7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருவுத்தர கோசா
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 










அது என்று அழைக்கப்படும் மூலப்பொருளான நீ
பழத்தின் சுவை போன்றவன். ஆழ் கடலின் உள்ளே
அழுத்தமான நிலையிலுள்ள அமுதத்தை விட
ஆழமானவன். எளிமையில் அறிய முடியாதவன்
அதே நேரத்தில் அடியவர்களுக்கு மிகவும்
எளிமையானவன். இப்படி பலதரப்பட்ட
வாதங்கள் உன்னைப்பற்றி இருக்கின்றன. இருந்தும்
தேவர்கள் அனைவரும் கூட அறிந்து கொள்ள முதியாத
நிலையில் நீ இருக்கின்றாய் ஆனால் இதுவே அவனுடைய
திருவுருவம். இவன் தான் சிவன் என்னும் அவன்
என்று நாங்கள் உணரும் படி நீ திருப்பெருந்துறையில்
எழுந்தருளி உள்ளாய். மலர்கள் நிறைந்த சோலைகள்
சூழ்ந்த உத்திரகோசமங்கை என்னும் தலத்தில் கோவில்
கொண்ண்டுள்ள திருப்பெருந்துறை சிவனே! நீ
எங்களுக்கு அருள்புரிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்.
அதனை கேட்டோம் எம்பெருமானே துயில் நீங்கி
எழுந்து அருள்புரிவாயாக.

No comments:

Post a Comment