Tuesday, January 8, 2013

திருப்பாவை பாடல் 25 -- திருப்பள்ளியெழுச்சி 5

திருப்பாவை பாடல் 25


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.





பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில்
பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம்
ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு
மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன்
உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான்.
அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில்
பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த
குணங்களையுடைய திருமாலே! உனது அருளை
யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத்
தந்தாயானால், உனது விரும்பத்தக்க
செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த
பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம்.
உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள்
நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.


விளக்கம்: பக்தன் பக்தி செலுத்தும் போது,
இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான்.
தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும்
அவனது தந்தை இரணியனுக்கும் வாதம்
நடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்?
என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால்
உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா
ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான்.
ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை.
பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள்
இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில்
அவன் இருந்தான். அவன் தூண் என்று சொல்லவே,
அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய்
வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப்
பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய
பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே
மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா!
இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை

அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.



திருப்பள்ளியெழுச்சி 5

பூதங்கள் தோறும்நின் றாஎனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உன்னைக் கண்டறி வாரை
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 




வளம் பொருந்திய வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும்
அரசே! நீ நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம்
என ஐம்பெரும் பூதங்களிலும் கலந்திருப்பவன்
என்று புலவர்கள் பாடுகின்றனர் அதுமட்டுமின்றி
பிறப்பும், இறப்பும் இல்லாதவன் என கூறி
கீதங்களால் பாடுகின்றனர், ஆடுகின்றனர்.
ஆனாலும் உன்னை பார்த்தவர்களை பார்த்து
அறிந்ததில்லை நாங்கள். சிந்தனையில்
எட்டாதவனாக இருந்தாலும் நாங்கள் செய்கின்ற
தவறுகளையும், குற்றங்களையும் நீக்கி காத்தருள
வேண்டும் எம்பெருமானே! துயில் நீங்கி
அருள்புரிவாயாக

No comments:

Post a Comment