Wednesday, November 14, 2012

சிவ வடிவங்கள் 64 - 21. கல்யாண சுந்தர மூர்த்தி



21. கல்யாண சுந்தர மூர்த்தி




திருக்கைலையில் அனைத்து தேவர்குழாமுடன் சிவபெருமான் வீற்றிருக்கையில் பார்வதி தேவியார் எழுந்து இறைமுன் சென்று தக்கன் மகளால் தாட்சாயிணி என்ற பெயர் பெற்றேன். அந்த அவப்பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார். உடன் சிவபெருமானும் பார்வதி பர்வத மன்னன் உன்னை மகளாக அடைய தவம் இயற்றுகிறான். நீ அவரிடம் குழந்தையாக பிறப்பாயாக. பிறகு உன்னை நான் மணமுடிப்பேன் என்றார். அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று வயதுள்ள குழந்தையாக வந்து சேர்ந்தார். அக்குழந்தையை அவர்கள் சீராட்டி வளர்த்தனர். பார்வதிதேவி அருகில் இல்லாததால் சிவபெருமான் யோகத்தில் இருந்தார். அதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. உடன் தேவர்களின் ஆலோசனைப்படி மன்மதன் சிவபெருமானின் யோகத்தைக் கலைக்க பாணம் விட்டார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் அவரை நெற்றிக் கண்ணால் எரித்தார். இதனால் கவலையுற்ற ரதி சிவனிடம் சரணடைந்தார். அவரும் பொருத்திருக்கச் சொன்னார்.

இதற்கிடையே பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி சிவனை மணாளனாக அடைய வேண்டித் தவமிருந்தார். பார்வதி முன் அந்தணராகத் தோன்றி தன்னை மணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து சிவபெருமானை மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். விரைவில் வந்து மணம் புரிவேன் என்று கூறி மறைந்தார். பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கே சிவபெருமான் சப்தரிஷிகளிடம் தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார். இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் மணநாளாக குறிக்கப்பட்டது. தேவருலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வடதிசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அவர் தயங்கவும் உமக்கு எம் திருமணக்கோலத்தை காட்டுவோம் எனவே தென்திசை செல்க என்று பணிந்தார். அகத்தியரும் அவ்வாறு சென்றார். உடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது ரதி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டினார்.

சிவபெருமானும் அவ்வாறே மன்மதனை உயிர்ப்பித்தார். பின் ரதியின் கண்களுக்கு மட்டும் உருவத்துடனும், மற்றொர்க்கு அருபமாகவும் காட்சியளிக்கும் படி வேண்டினார். பின் அவரவர், அவரவர் இருப்பிடம் திரும்பினர். பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும். அவரை தரிசிக்க தாம் செல்ல வேண்டிய தலம் திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையாகும். இங்கு மூலவர் பெயர் விழியழகர், இறைவி பெயர் சுந்தர குஜாம்பிகை யாகும். இங்கு உற்சவ மூர்த்தியாக கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார். இங்குள்ள கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்த மாங்கல்யத்தை தானமாகப் பெற, கொடுக்க திருமணம் தங்குதடையின்றி நடைபெறும். மேலும் பிரதோஷ தரிசனமும் சிறப்பானதாகும். மல்லிகைப்பூ அர்ச்சனையும், சர்க்ககரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்கள், குருவாரங்களில் கொடுக்க திருமணத்தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். மேலுமொரு சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு ரோஜாமாலை அணிவித்துப் பூச்செண்டு கொடுத்தால் கல்யாணம் இளம்பெண்களுக்கு கூடி வரும். இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான் உமை திருமணக்கோலம் உள்ளது.

No comments:

Post a Comment